

திருப்பதி,
‘திருப்பதி லட்டு’ பிரசாதத்தில் நூல் இருந்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது என திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தொடர்பாக சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாங்கப்பட்ட லட்டு ஒன்றில் நூல் போன்ற பொருள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் லட்டு பிரசாதம் குறித்து பக்தர்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும் விதமாக வீடியோ ஒன்றை உருவாக்கி அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது சரியல்ல. பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய சரிபார்க்கப்படாத வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான எந்த தகவலாக இருந்தாலும் அதுபற்றி உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.