திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா: 17-ந்தேதி துவக்கம்

பிரம்மோற்சவ விழாவில் 22-ம் தேதி மாலை தங்கத் தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடைபெறுகிறது.
திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வரும் 17-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி 11-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 16-ம் தேதி லட்ச குங்குமார்ச்சனை மற்றும் அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.
17-ம் தேதி காலை தனுர் லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
18-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 19-ம் தேதி முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 20-ம் தேதி கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமந்த வாகன வீதிஉலா, 21-ம்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு ‘சிகர’ நிகழ்ச்சியாக யானை வாகன வீதிஉலா நடக்கிறது.
22-ம் தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத் தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 23-ம் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 24-ம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 25-ம் தேதி காலை பஞ்சமி தீர்த்தம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு கொடியிறக்கம், 26-ம் தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.
வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கின்றன. வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.






