திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்


திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
x

வைகாசி விசாகத்தேர் திருவிழாவிற்காக உற்சவர், மலைக்கோவிலில் இருந்து பரிவார தெய்வங்களுடன் நாளை மறுநாள் நகருக்கு எழுந்தருள்கிறார்.

நாமக்கல்

திருச்செங்கோட்டின் சிறப்பான திருவிழாக்களில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவும் ஒன்று. மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத் தேர் திருவிழா 14 நாட்கள் விமரிசையாக நடக்கும். அவ்வகையில் இந்த ஆண்டின் வைகாசி விசாகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வாக கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.

செங்கோட்டுவேலவர் சந்நதிக்கு எதிரில் அமைந்துள்ள 36 கணுக்களை உடைய கொடிமரத்தில் பாரம்பரிய முறைப்படி செங்குந்தர் எழுகரை நாடு நெசவாளர்கள் கொடுத்த துணியை கொண்டு கொடி அமைக்கப்பட்டிருந்தது. கொடிசீலையின் ஒரு முனையில் தெய்வத்தின் வாகன வரைபடம் பதிக்கப்பட்டிருந்தது. அந்த முனையில் மாவிலை கூர்ச்சம் வைத்து கட்டி பூஜைகள் செய்து தர்பை கயிறு, கொடிதுணி என்ற மூன்றும் ஒன்றாக சேர்த்து கொடிமரத்தில் ஏற்றி சுற்றி கட்டினார்கள்.

முன்னதாக முதல் நிகழ்ச்சியாக துவஜாரோகணம் என்னும் சிறப்பு பூஜைகள் அர்த்நாரீஸ்வரருக்கு நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்க கலச பூசைகள் செய்த சிவாச்சாரியர்கள் கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினார்கள். தொடர்ந்து அர்த்தநாரீஸ்வர் சந்நிதானம் முன்பு உள்ள கொடி மரத்திலும் கொடியேற்றப்பட்டது.

விழாவின் தொடர் நிகழ்வாக வரும் 4-ம் தேதி புதன்கிழமை அன்று உற்சவர் சுவாமி திருமலையில் இருந்து பரிவார தெய்வங்களுடன் நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். அடுத்த வாரம் திங்கள் கிழமை (9.6.2025) திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், விநாயகர் செங்கோட்டு வேலவர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றைய தினம் இரவு ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

மறுநாள் (10.6.2025) செவ்வாய்க்கிழமை அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 14-ம் தேதி சனிக்கிழமை அர்த்தநாரீஸ்வர் பரிவார தெய்வங்களுடன் திருமலை சந்நிதானத்திற்கு எழுந்தருளுவார். தேர்த் திருவிழாவின் அங்கமாக கண்ணகி விழா, கம்பன் விழா, சேக்கிழார் விழா, வள்ளலார் விழா நடக்க உள்ளது. இதில் பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், வழக்காடு மன்றங்கள் நடைபெறும்.

1 More update

Next Story