நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x

நெல்லையில் தேரோட்டத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட கண்காமிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவில் சுவாமி -அம்பாள் வீதிஉலா மற்றும் சிறப்பு பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 5 தேர்களும் அலங்காரம் செய்யப்பட்டு, புதிய வடங்களும் இணைக்கப்பட்டன. டவுன் 4 ரதவீதிகளிலும் புதிதாக தார் ரோடு போட்டு சீரமைக்கப்பட்டது.

இன்று அதிகாலையில் சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளியதும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதிகாலையில் விநாயகர், முருகர் தேர்கள் இழுக்கப்பட்டன. காலை 8 மணியளவில் சுவாமி நெல்லையப்பர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்படுகிறது. இறுதியாக சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். தேரோட்டத்தைக் காண்பதற்காக ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் நெல்லை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தேரோட்டத்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட கண்காமிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் 3 டிரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. ரத வீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. டவுன் பஸ்கள் ரதவீதி பகுதிக்குள் வராமல், மாநகராட்சி எதிரே உள்ள பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும். தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, கடையத்தில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையம் வருகிற பஸ்கள் பழைய பேட்டை, கண்டியபேரி சாலை வழியாக ராமையன்பட்டி, சத்திரம் புதுக்குளம், சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை வழியாக புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும். இந்த வழித்தடத்தில் சந்திப்புக்கு வருகிற டவுன் பஸ்கள் ராமையன்பட்டி சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி குருநாதன் கோவில் விலக்கு, தச்சநல்லூர் பஜார், ராம் தியேட்டர் வழியாக சந்திப்புக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேரோட்டத்தையொட்டி இன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

1 More update

Next Story