வேலாயுதம்பாளையம்: அம்மன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குந்தாணி பாளையம் நத்தமேடு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், புன்னம் மாரியப்பன், பேரூரம்மன் கோவில், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில், உப்பு பாளையம் மாரியம்மன் கோவில், அத்திப்பாளையம் சின்ன பொன்னாச்சி அம்மன் கோவில், குளத்து பாளையம் தங்காயி அம்மன் கோவில், திருக்காடுதுறை மாரியம்மன் கோவில், நஞ்சை புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






