

வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியில் சாலை கெங்கையம்மன் கோவில் திருவிழா, கடந்த 15 -ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வயிரவநாதர் சாமிக்கு பால் பொங்கல், அம்மனுக்கு காப்பு அணிவித்தல், மறுகாப்பு அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தினமும் இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணியளவில், அம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தியுடன் தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர்.
நாளை காலை கோவில் வளாகத்தில் அம்மன் சிரசு ஏற்றப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.