

மும்பை,
ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாராவி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
ஐபோன் அல்லது ரூ.1 லட்சம்
மும்பை நகரில் தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவி போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பெண் மற்றும் அவரது 28 வயது மகனுக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சமீபத்தில் வழக்கு தொடர்பாக தாராவி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மானே (வயது 53) என்பவரை வாலிபர் சந்தித்தார். அப்போது வாலிபர் மற்றும் அவரது தாய் மீது போடப்பட்டுள்ள மோசடி வழக்கில் சில கடுமையான சட்டப்பிரிவுகளை நீக்க ஐபோன் அல்லது ரூ.1 லட்சம் தருமாறு இன்ஸ்பெக்டர் கேட்டு உள்ளார்.
வாலிபர் அவ்வளவு பணம் தர முடியாது என கூறியுள்ளார். இறுதியில் ரூ.40 ஆயிரம் கொடுத்தால் மோசடி வழக்கில் சில சட்டப்பிரிவுகளை நீக்குவதாக இன்ஸ்பெக்டர் கூறினார்.
கையும் களவுமாக சிக்கினார்
பணத்தை தருவதாக கூறிய வாலிபர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். வாலிபர் லஞ்ச ஒழிப்புதுறையினர் கொடுத்த யோசனையின்படி நேற்று முன்தினம் இரவு தாராவி போலீஸ் நிலையத்துக்கு சென்று ரூ.40 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் விஜய் மானேயிடம் கொடுத்தார்.
அப்போது போலீஸ் நிலையத்துக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜய் மானேயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் சிக்கிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.