நம்பர்-1 டோல்கேட் பகுதியில் புதிதாக ‘டாஸ்மாக்’ கடை திறக்க அனுமதிக்க கூடாது - குறைதீர் கூட்டத்தில் மனு

திருச்சி நம்பர்-1 டோல்கேட் பகுதியில் புதிதாக ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்க அனுமதிக்க கூடாது என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
நம்பர்-1 டோல்கேட் பகுதியில் புதிதாக ‘டாஸ்மாக்’ கடை திறக்க அனுமதிக்க கூடாது - குறைதீர் கூட்டத்தில் மனு
Published on

திருச்சி,

திருச்சி நம்பர்-1 டோல்கேட், பிச்சாண்டவர்கோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று மதியழகன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மண்ணச்சநல்லூர் தாலுகா பிச்சாண்டவர் கோவில் கிராமம், நம்பர்-1 டோல்கேட் பஸ் நிறுத்தம் ஆகியவை பொதுமக்கள் பலரும் கூடும் பகுதியாகும். மேலும் நெரிசல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்லும் மையப்பகுதியாகவும் உள்ளது.

ஏற்கனவே, அங்கு மதுக்கடை திறக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுக்கடைக்கு வருபவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய கலெக்டரிடம் மனு கொடுத்து, டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு அப்பகுதி அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. அந்த நிலை தொடரவே மக்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், தற்போது நம்பர்-1 டோல்கேட் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அப்பகுதியில் மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார், மாநில செயலாளர் சுவாமிநாதன், துணைத்தலைவர் சீனிவாசன், திருச்சி மாவட்ட தலைவர் பரமானந்தம் மற்றும் சிலர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில், திருச்சியில் மதமாற்றம் செய்யும் நோக்கத்தில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளனர்.

திருச்சியை சேர்ந்த 20 வயது இளம்பெண், தனது தாயாருடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது உறவுக்காரரும், அவரது மகனும்(சகோதரர் உறவு) எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி உத்தரபிரதேச மாநிலம் மிர்ஜாபூருக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னை வீட்டு வேலை செய்யும்படி கொடுமைப்படுத்தினர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சகோதரர் என்னை திருச்சிக்கு அழைத்து வந்து ஒரு ஓட்டலில் தங்கவைத்து கற்பழித்தார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். நான் பயந்துபோய் சொல்லவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஒரு இளைஞருக்கு பெற்றோர் என்னை திருமணம் செய்து கொடுத்தனர். அங்கு ஒரு வாரம் மட்டும் வாழ்ந்த என்னை, சகோதரர் செல்போனில் மிரட்டியும், ஆபாசமாக பேசியும் கணவருடன் வாழவிடாமல் செய்து விட்டார். இதனால், கணவர் என்னை துரத்தி விட்டார். தற்போது தாயார் பராமரிப்பில் இருக்கிறேன். எனவே, என் வாழ்க்கையை சீரழித்த உறவுமுறை சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்து கணவருடன் சேர்த்து வைக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com