பஸ்கட்டணம் குறைப்பு கண்துடைப்பு நடவடிக்கை டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

பஸ்கட்டணம் குறைப்பு கண்துடைப்பு நடவடிக்கை என்று தஞ்சையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
பஸ்கட்டணம் குறைப்பு கண்துடைப்பு நடவடிக்கை டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
Published on

கும்பகோணம்,

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா பெயரை கூறி தமிழகத்தில் பொய்யான ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இது மக்களுக்கான விரோதமான அரசாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் என்னை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பேன் என கூறியுள்ளார். எனக்கு தெரிந்தது வரை ஸ்டாலினுக்கு அவர்களது கட்சியிலேயே செல்வாக்கு குறைந்து வருகிறது. அதை சரிசெய்ய தேவையில்லாததையெல்லாம் பேசி வருகிறார்.

ஜீயர், மடாதிபதிகள் சாதாரணமானவர்கள் இல்லை. பொது மக்களை விட வித்தியாசமானவர்கள். அவர்கள் தேவையில்லா குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஜீயர்கள், மடாதிபதிகள் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்திருக்க மாட்டேன் என்று கூறியது அவமதிப்பதாகும். இது போன்ற பேச்சு தேவையில்லாததாகும்.


மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் ஆணையம் அமைத்து தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். கர்நாடகாவில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு பாரா முகம் காட்டி வருகிறது. முத்தலாக் என்பது பல நூறு ஆண்டுகளாக பின்பற்றி வருகிற பழக்கம். அதில் தலையிடுவது கூடாது. முத்தலாக் பிரச்சினை அவசரகதியில் மத சுதந்திரத்தை பின்பற்றாமல் செயல்படுத்தியுள்ளனர். மத்திய அரசின் இந்த செயல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அவர்களை அழைத்து பேசுவதுதான் சரியானதாகும். முத்தலாக் விஷயத்தில் கோர்ட்டு சொல்வதை கேட்கும் மத்திய அரசு ஏன் காவிரி விவகாரத்தில் கோர்ட்டு சொன்னபடி நடக்கவில்லை என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தஞ்சையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது கண்துடைப்பு நடவடிக்கை. இதில் கவுரவம் பார்க்காமல், மக்கள் நலன் பகுதி பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்தால் தான் பொதுமக்களுக்கு நல்லது. என்னை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை வேண்டுமானால் அகற்றலாம். மக்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் விரக்தியில் பேசுகிறார்கள்என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com