அந்தியூர், கடம்பூர் பகுதியில் வாகன சோதனை: கர்நாடக மது கடத்திய 4 பேர் கைது

அந்தியூர், கடம்பூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர், கடம்பூர் பகுதியில் வாகன சோதனை: கர்நாடக மது கடத்திய 4 பேர் கைது
Published on

ஈரோடு

அந்தியூர், கடம்பூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீவிர கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மது கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஈரோடு மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரக்கு ஆட்டோ

இந்தநிலையில் அந்தியூர் அருகே உள்ள பர்கூர்-தட்டக்கரை போலீஸ் சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து முட்டைகள் ஏற்றிய சரக்கு ஆட்டோ வந்தது. உடனே போலீசார் அந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சரக்கு ஆட்டோவில் அட்டை பெட்டிகளில் முட்டை இருந்தது, மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் முட்டை அட்டை பெட்டிகளை எடுத்து பார்த்தனர்.

182 மது பாக்கெட்டுகள்

அதில் அட்டைகளுக்கு அடிபகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கர்நாடக மதுபாக்கெட்டுகளை கண்டு பிடித்தனர். இதுகுறித்து போலீசார் சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தை சேர்ந்த நவீன் குமார் (வயது 24) என்பதும், அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (39) என்பதும், இவர்கள் சரக்கு ஆட்டோவில் பதுக்கிவைத்து கர்நாடக மதுபாக்கெட்டுகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 182 கர்நாடக மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கைது

அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஊஞ்சக்காடு பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (29) என்பதும், இவர் அந்த பகுதியில் நின்று கொண்டு கர்நாடக மதுபாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 கர்நாடக மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடம்பூர்

கடம்பூர் போலீசார் நேற்று கல்கடம்பூர் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாலட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 37), 19 வயது வாலிபர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 கர்நாடக மதுபாக்கெட்டுகள் மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பசுவனாபுரம் பகுதியில் கர்நாடக மது விற்ற அந்த பகுதியை சேர்ந்த அன்னராணி (45) என்பரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 47 கர்நாடக மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள இரங்காட்டு பாளையத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) என்பதும், இவர் அந்த பகுதியில் நின்று கொண்டு சாராயம் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

திங்களூர்

திங்களூர் அருகே உள்ள நல்லாம்பட்டி மணி தோட்டம் என்னும் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பித்து ஓட முயற்சித்தார். ஆனால் போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கொத்துக்காரர் வீதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 42) என்பதும், இவர் தோட்டத்து வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 லிட்டர் சாராயத்தையும் அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com