திருவெறும்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த சலூன் கடைக்காரர் சாவு

திருவெறும்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த சலூன் கடைக்காரர் உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த சலூன் கடைக்காரர் சாவு
Published on

பொன்மலைப்பட்டி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). இவர், அந்தப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார்.

இவர், நவல்பட்டு மற்றும் துவாக்குடி பகுதிகளை சேர்ந்த சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். ஆனால், வாங்கிய பணத்தை முருகேசனால் திருப்பி கட்ட முடியவில்லை.

இதனால், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் முருகேசனை மிரட்டி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் முருகேசனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அவர் கடந்த மாதம் 21-ந் தேதி காலை முருகேசனிடம் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் எல்லாம் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த முருகேசன் அன்றைய தினம் காலை தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் உள்பட 9 பேர் மீது நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களில் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நவல்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com