காவிரிநீர் பங்கீடு தீர்ப்பு எதிரொலி: தமிழக- கர்நாடக எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

காவிரி நீர் குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியால் தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
காவிரிநீர் பங்கீடு தீர்ப்பு எதிரொலி: தமிழக- கர்நாடக எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்
Published on

ஈரோடு,

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த இறுதி தீர்ப்பை நேற்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. இதில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், ராமாபுரம் செல்லும் லாரிகள், தமிழக அரசு பஸ்களை அந்தியூர் அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லையான கர்காகண்டியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதேபோல் அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்களை கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு வழக்கமாக சிமெண்டு மூட்டைகள், கோழி தீவனம் ஆகியவை சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளில் கொண்டு செல்லப்படும். இந்த வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

ஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து சத்தியமங்கலம், தாளவாடி வழியாக கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள், லாரிகள் முன்னெச்சரிக்கையாக கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன. சத்தியமங்கலத்தில் இருந்து 19 தமிழக அரசு பஸ்கள் கர்நாடகத்துக்கு வழக்கமாக இயக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காரணமாக இந்த பஸ்கள் தாளவாடி வரை சென்று திரும்பி வந்தன. கர்நாடக மாநிலத்தில் இருந்து 70 பஸ்கள் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு வந்து செல்லும். இந்த பஸ்களும் நேற்று வரவில்லை.

தமிழக பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையில் உள்ள ஆசனூர் சோதனை சாவடி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தமிழக பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல் கர்நாடக பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் அனைத்தும் கர்நாடக மாநில எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பயணிகள் நலன் கருதி கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பஸ்கள் மட்டும் ஆசனூர் சோதனை சாவடி வரை போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டன. பயணிகளை இறக்கிய பின்னர் மீண்டும் அந்த பஸ்கள் கர்நாடக மாநில பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பயணிகள் தமிழக பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் ஏறி, சத்தியமங்கலம், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்றனர்.

இதையொட்டி இரு மாநில எல்லைகளிலும் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜவேல், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா மற்றும் இரு மாநில போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆசனூர் சோதனை சாவடி, புளிஞ்சூர் சோதனை சாவடி, திம்பம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com