இன்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வில் 35,214 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

இறுதி ஒதுக்கீடு ஆணை, நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகும்.
இன்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வில் 35,214 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு
Published on

சென்னை,

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இன்ஜினீயரிங் கல்லுாரிகளுக்கான நடப்பு கல்வியாண்டு கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாற்றுத் திறன், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவில், 137 மாணவ- மாணவியருக்கு, பி.இ.,-பி.டெக்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன்பின், பொதுப்பிரிவில் சிறப்பு பிரிவு மாணவ மாணவியர் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மற்றும் அரசு பள்ளி 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு, கடந்த 20ம் தேதி தொடங்கியது.

இதில், பொதுப்பிரிவில், தரவரிசையில் முதல் 37,976 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தர வரிசையில், முதல் 2,570 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பொதுப்பிரிவில், 32,250 மாணவர்கள், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந் தாய்வில், 2,434 மாணவர்கள் பங்கேற்று, கல்லுாரிகளை தேர்வு செய்தனர். விருப்பகல்லுாரிகளை தேர்வு செய்ய, கடந்த 22ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீடு ஆணை நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, பொதுப்பிரிவில் 31,221; 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 2,427; தொழிற்கல்வியில் 1,318; 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவு தொழிற்கல்வியில் 248 மாணவர்கள் என, மொத்தம், 35,214 மாணவ - மாணவியருக்கு, பி.இ., பி.டெக்., படிப்புக்கான, தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதை உறுதி செய்ய மாணவர்களுக்கு, இன்று மாலை 5:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கட்டாயம் தங்களின் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை, உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்களின் தற்காலிக ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இறுதி ஒதுக்கீடு ஆணை, நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com