

சென்னை,
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 தேர்வை முடித்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, முதல் நாளில் 8,500 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கடந்த 8 நாட்களில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு 89,629 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 34,170 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உள்ளதாகவும், அவர்களில் 14,681 பேர் சான்றிதழ்களை பதிவு செய்து இருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி ஆகும். எனவே மாணவ-மாணவிகள் இதனை நினைவில் வைத்து விண்ணப்பப் பதிவை குறித்த நேரத்தில் பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.