

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதலாவது பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்குகிறது. 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற்றது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புபவர்களுக்காக இரண்டாவது தேர்வு வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரம் முதலாவது பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பொதுத்தேர்வுக்கான ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை டிஜிலாக்கர் முடிவுகள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2026-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்வு மற்றும் 2-வது பொதுத்தேர்வு முடிவுகளை ஒருங்கிணைத்தபின், 10-ம் வகுப்புக்கான ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.78 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
2-வது பொதுத்தேர்வுக்கு 6 லட்சத்து 64 ஆயிரத்து 27 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 6 லட்சத்து 63 ஆயிரத்து 777 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 955 பேர், முதன்மை பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மேம்படுத்தும் நோக்கில் மீண்டும் தேர்வு எழுதினர். இவர்களில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 95 பேர், அதாவது 59.95 சதவீதம் பேர் தங்களது மதிப்பெண்களை உயர்த்தியுள்ளனர்.
கம்பார்ட்மென்ட் (தோல்வி) பிரிவில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 822 மாணவர்கள் தேர்வெழுதியதில், 78 ஆயிரத்து 503 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இந்தப் பிரிவில் 52.40 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் இது 48.68 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் அதிகமான மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு தயாரிக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.