கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
Published on

கோவை,

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது

விண்ணப்பங்கள்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண் படிப்புகளுக்கு மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 3-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

சான்றிதழ் சரிபார்ப்பு

இதனை தொடர்ந்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். தொடர்ந்து அவர்களின் சான்றிதழ்களை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டனர்.

சேர்க்கை கட்டணம்

இதுகுறித்து மாணவர் சேர்க்கை குழுவினர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வேளாண் பல்கலைக்கழகம் உள்பட அரசு கல்லூரிகளில் வேளாண்மை படிப்பில் ஆங்கில வழியில் 1,793 பேரும், தமிழ் வழியில் 51 பேரும் சேர உள்ளனர். அதே போல் தோட்டக்கலை படிப்புகள் ஆங்கில வழியில் 546 இடங்களும், தமிழ்வழியில் 51 இடங்களும் அரசு கல்லூரிகளில் உள்ளன. மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் வனவியல் பாடத்தில் 127 இடங்கள், பட்டுப்பூச்சியியல் பிரிவில் 62 இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் 3,367 இடங்கள், 28 தனியார் கல்லூரிகளில் 4,736 இடங்கள் என மொத்தம் 8,103 இடங்களும் உள்ளன. தோட்டக்கலை பாடங்கள் புதியதாக சில கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் வேளாண்மை கல்லூரிகளில் சேர்வதற்கான அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கி உள்ளது. எனவே கலந்தாய்வில் தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்புக்கு பின், மாணவர்கள் அவர்களுடைய இடஒதுக்கீட்டினை உறுதி செய்ய ரூ.20 ஆயிரம் சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும். இது தவறும் பட்சத்தில் அவர்களுடைய இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, காலியிடமாக அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை ugadmissions@tnau@ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் நேற்று நடந்த கலந்தாய்வில், 128 இடங்கள் நிரம்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com