

சென்னை,
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, மருத்துவ மாணவர் தேர்வுக் குழுவின் இணையதளமான (http://www.tnmedicalselection.org) மூலம் நடைபெற்று வருகிறது.
மருத்துவப் படிப்பில் சேர தகுதியான மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் முதலில் கடந்த 19-ம் தேதி வரை வழங்கப்பட்டது. பின்னர், கூடுதலாக ஒரு நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாகவும் கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 24-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களது விருப்பக் கல்லூரிகளைத் தேர்வு செய்து பதிவு செய்யலாம்.
கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட விவரம் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதன் காரணமாக, மாநில அளவிலான மருத்துவக் கலந்தாய்வுக்கான கல்லூரி தேர்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மாணவர் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.