என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு: 2.74 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பம்

கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு: 2.74 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியானது. இதில் 95.03% மாணவர்கள், அதாவது 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனைத்தொடர்ந்து, 2025-26 கல்வி ஆண்டில் உயர்கல்விகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது. தொடர்ந்து, மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினீயரிங் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவாகள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கடந்தாண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கடந்த ஆண்டைவிட தற்போதே 2.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் உள்ளன. எனவே, இதைவைத்து பார்க்கும் போது, மாணவர்கள் மத்தியில் என்ஜினீயரிங் படிப்பிற்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியா சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை என்ஜினீயரிங் கல்லூரிகளும் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com