ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்: 654 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: டின்பிஎஸ்சி

ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் சார்ந்த 654 பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்: 654 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: டின்பிஎஸ்சி
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் உதவி என்ஜினீயர், வேளாண் அலுவலர், கட்டிட வடிவமைப்பு உதவியாளர், உதவி இயக்குனர், வேதியியலாளர், மருந்து ஆய்வாளர், இளநிலை கட்டிட வடிவமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி என் பி எஸ் சி) நடத்த உள்ளது.

இதுவரை தனித்தனியாக தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் இருந்து தொழில்நுட்ப பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்திருக்கிறது.அதன்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் சார்ந்த 654 பணிகளுக்கான அறிவிப்பை டி என் பி எஸ் சி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான தாள்-1 தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 26-ம் தேதியும், தாள்-2 தேர்வு அக்டோபர் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

தேர்வை பொறுத்தவரையில் தாள்-1, தாள்-2 என்ற வகையில் நடக்க இருக்கிறது. இதில் தாள்-1 'பகுதி-அ'-ல் தமிழ் தகுதித்தேர்வும், 'பகுதி-ஆ'-ல் பொது அறிவு, திறனறிவுத்தேர்வும் நடத்தப்படும்.தாள்-2-ல் பாடம் சார்ந்த தேர்வாக நடைபெறும். மொத்தம் 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடக்கும் நிலையில், அதில் தமிழ் தகுதித்தாள் தேர்வுக்கான 150 மதிப்பெண்ணை தவிர மற்ற 450 மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். தாள்-1 தேர்வு ஓ எம் ஆர் வடிவிலும், தாள்-2 தேர்வு கணினி வாயிலாகவும் நடத்தப்பட இருக்கின்றன. மொழிப் பெயர்ப்பாளர் பதவிக்கு மட்டும் தாள்-2 தேர்வு விரித்துரைக்கும் வகையிலான தேர்வாக நடைபெறும் என டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com