பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அதிகாரிகள் தகவல்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அதிகாரிகள் தகவல்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், டி.என்.சி.), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-2026-ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட (சிறந்து விளங்கிய பள்ளிகள்) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டதிற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம் ஆகும். மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நாள் அக்டோபர் 15-ந் தேதி.

புதுப்பித்தலுக்கு கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ-மாணவிகள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் Renewal application என்ற இணைப்பில் சென்று ஓ.டி.ஆர். எண் பதிவு செய்து 2025-2026ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பித்து கொள்ளலாம். நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் ஓ.டி.ஆர். எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும்.

இதை பயன்படுத்தி கல்வி உதவித்தொகை பெற உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான விவரங்களை ஆன்லைன் மூலமும் அறிந்துகொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com