

சென்னை,
சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/ மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களிடம் இருந்து கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் 2026-2027 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் ( Unconditional Offer letter) பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 15/10/2026.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.