

சென்னை,
என்ஜினீயரிங் பட்டதாரி தகுதித்தேர்வு (கேட்) 2027 தேர்வை நடத்தும் ஒருங்கிணைப்பு கல்வி நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி. செயல்படுகிறது. 'கேட்' தேர்வானது என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல், கட்டிடக் கலை, வணிகம், மானுடவியல் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புக்கான பாடங்களில் விண்ணப்பதாரர்களின் புரிதலை மதிப்பிடும் தேசிய அளவிலான தேர்வாக விளங்குகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அடுத்த மாதம் தொடங்குகிறது.
அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுதொடர்பான விவரங்களுக்கு https://gate2027.iitm.ac.in/ பார்வையிடலாம். கணினி அடிப்படையில் நடத்தப்படும் 'கேட் 2027' தேர்வில், மொத்தம் 30 தேர்வுத் தாள்கள் உள்ளன. அதிகரித்து வரும் தேவைக் கேற்ப 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் திருத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 'கேட் 2027-ல் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் முறையில் புதிய வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜவுளி பொறியியல் மற்றும் பைபர் அறிவியல் வினாத்தாள், என்ஜினீயரிங் அறிவியல் பிரிவின் கீழ் உட்பிரிவு தாளாக மாற்றப்பட்டு உள்ளது. வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அனுமதிக்கப்பட்ட 2 ஜோடி தேர்வுத்தாள்களில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ எழுதுவதற்கு தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெறும் 'கேட்' மதிப்பெண், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது.
நியாயமாகவும், பாதுகாப்பாகவும் தேர்வை நடத்தும் விதமாக டிஜிலாக்கர், முகப்பதிவு மூலமாக இணையவழி பதிவு செய்யப்படும். எனவே, தேர்வுக் கூடங்களுக்குள் தடையின்றி நுழைவதற்கு தேவையான இந்த மேம்படுத்தப்பட்ட பதிவு அம்சங்களைப் பயன்படுத்துமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல் சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.