தேர்தல் செலவு கணக்கு பராமரிப்பு குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை

தேர்தல் செலவு கணக்கு பராமரிப்பு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் செலவு கணக்கு பராமரிப்பு குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை
Published on

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள், கொடி, தோரணங்கள், பந்தல், கட்டுமானம், மேடை அமைத்தல், துண்டு பிரசுரங்கள் வெளியிடுதல், சுவரொட்டிகள் அச்சிடுதல், விடுதி மற்றும் மண்டப வாடகை நாற்காலிகள், உணவு, மின் இணைப்பு, மேளதாளம், சாப்பாடு, ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக வெளியிடப்படும் விளம்பரங்கள், பிரசாரத்துக்கு பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கான கட்டணங்கள் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

செலவினங்களை மேற்கொள்ளும்போது, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் வங்கியிலோ, கூட்டுறவு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளரால் நியமனம் செய்யப்படுகிற முகவர்களின் பெயரிலோ தனி கணக்கு தொடங்கிட வேண்டும்.

வேட்பாளர்கள் தாங்கள் தேர்தலில் செலவினங்கள் மேற்கொள்ளும் தொகையை வங்கியில் செலுத்தி தனித்தனி செலவினங்களுக்கு கோடிட்ட காசோலையின் மூலமாகவே செலவுகளை செய்ய வேண்டும். அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரையிலான தொகையை எடுத்துச் சென்று சில்லரை செலவினங்களை மேற்கொள்ளலாம்.

தேர்தல் செலவுக்காக தனியார்கள், பிற நிறுவனங்களிடம் இருந்து பெறுகிற பரிசுத்தொகை மற்றும் தேர்தல் நிதியை யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து பதிவு செய்து வங்கியில் செலுத்தி பின்னரே செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் தொடர்பான செலவினங்களை தினந்தோறும் உரிய பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்த ஆய்வு 3 முறை மேற்கொள்ளப்படும். வேட்பாளர்கள் உரிய நாட்களில் செலவு கணக்கை ஆய்வுக்கு உரிய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க தவறினாலோ, உண்மைக்கு புறம்பாகவோ, தவறுதலாகவோ இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரால் 24 மணி நேரத்துக்குள் அறிவிப்பு உத்தரவு வழங்கப்படும். அறிவிப்பு உத்தரவு பெற்ற அடுத்த 48 மணி நேரத்துக்குள் செலவினங்கள் குறித்து பதில் வழங்க வேண்டும். தவறினால் அறிவிப்பு உத்தரவில் உள்ள விவரங்களை வேட்பாளர்கள் ஏற்றுக் கொண்டதாக கருதி உரிய செலவினத்தொகையை வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி, மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com