நம்பிக்கை வாழ்க்கையை நலமாக்கும்..

‘வாழ்க்கையில் நம்பிக்கைதான் பெரும்மூலதனம்.
நம்பிக்கை வாழ்க்கையை நலமாக்கும்..
Published on

பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு பணத்தையோ, பொருளையோ சேர்த்துவைப்பதற்கு பதில், நம்பிக்கை என்ற பெருஞ்செல்வத்தை மட்டும் வழங்கினால்போதும் அவர்கள் வாழ்க்கையில் சாதித்துக்காட்டுவார்கள் என்ற திடமான எண்ணத்தோடு வாழ்க்கைக் கடலில் தாங்களும் குதித்து, குழந்தைகளையும் குதிக்கவைத்து, உங்களால் முடியும்.. எப்படியாவது நீச்சல் அடித்து கரை சேருங்கள் என்று சொல்லும் பெற்றோர், இன்று மிக குறைவு. அப்படி நம்பிக்கையை மட்டும் குழந்தைகளுக்கு ஊட்டிவளர்த்து அவர்களை சாதனையாளர்களாக்கிய ஒரு பெற்றோரின் கதை இது!

அந்த வித்தியாசமான பெற்றோரின் பெயர்: கிருஷ்ணமூர்த்தி- அவையாம்பாள். கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம் அருகில் உள்ள நாச்சார்கோவிலில் படிப்பறிவற்ற விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர். அவையாம்பாள் பி.யூ.சி. படித்தவர்.

அவையாம்பாளுக்கு இப்போது 76 வயது. நம்பிக்கை நாயகியாக இருக்கும் அவர், தனது வாழ்க்கை கதையை சொல்லக்கேட்போம்!

எனது பூர்வீகம் மாயவரம். எங்கள் குடும்பம் தேச பக்தி நிறைந்தது. எனது தாயார் கிருஷ்ணம்மாள் நன்றாக பாடுவார். அவர் காந்திஜி முன்பு தேச பக்தி பாடல்கள் பாடி, அவரது திருக்கரத்தாலே பரிசு பெற்றவர். நான் பி.யூ.சி. படித்துக்கொண்டிருக்கும்போது எனது கணவரை பற்றி என் குடும்பத்தினர் அறிந்திருக்கிறார்கள். அவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, காமராஜரின் சிந்தனையால் கவரப்பட்டு, அவர் வழியில் வாழ்க்கை நடத்தியவர். திருச்சி, கள்ளிப்பட்டு காந்தி கிராமத்தில் உதவியாளராக பணியாற்றிய அவரை, பின்பு தேர்வு செய்து குஜராத் காந்திஜி ஆசிரமத்தில் பணியாற்ற அனுப்பினார்கள். மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டாக அவர் வாழும் வாழ்க்கையை பார்த்துவிட்டு, மறைந்த அமைச்சர் கக்கன், காமராஜரிடம் பரிந்துரைத்ததின் பேரில் என் கணவர் நேரடியாக வருவாய் ஆய்வாளராக அரசுப் பணியில் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் எனக்கும்- அவருக்கும் திருமணம் நடந்தது. உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அவர், என்னோடு கலந்தாலோசித்து துணிச்சலாக வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு முடிவுகளை எடுத்தார். ஒன்று, குடும்ப சொத்து எதுவும் தனக்கு வேண்டாம் என்று அவர் அனைத்தையும் துறந்தது. இரண்டு, இரண்டாண்டுகள் மனைவி என்பதை நீ மறந்து மாணவியாக இருக்கவேண்டும் என்று கூறி, என்னை ஆசிரியை பயிற்சிக்கு அனுப்பியது.

பூர்வீக சொத்துகள் எதுவும் வேண்டாம் என்று என் கணவர் கூறியதைக் கேட்டு உறவினர்கள் சிலர், என்னப்பா இப்படி பண்ணிட்டே. எதிர்காலத்தில் உன் பிள்ளைகளுக்கு என்னத்தை கொடுப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கு என் கணவர், தன்னம்பிக்கையையும், அறிவையும் கொடுப்பேன். அதைவைத்து என் பிள்ளைகள் மற்றவர் களைவிட சிறப்பாக வாழ்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கணவர் விருப்பப்படி நான் 1965-ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள பள்ளிக்கு ஆசிரியை பயிற்சிக்கு சென்றேன். அந்த காலகட்டத்தில் திருமணமான பெண்களை பயிற்சிக்கு சேர்க்கமாட்டார்கள். அதனால் என் தாலிச் சங்கிலியை கழற்றி வாங்கிய கணவர், நீ பயிற்சி பெறும் இரண்டு ஆண்டுகளும் என் மனைவி அல்ல.. மாணவி.. என்றார். தனது சகோதரி என்று கூறி என்னை பயிற்சிக்கு சேர்த்தார். நான் திருமணமான பெண் என்பது எனது பயிற்சி முடியும் வரை, பயிற்சி பள்ளியில் உள்ள யாருக்கும் தெரியாது. ஆசிரியையாகி பிள்ளைகளுக்கு பாடம் நடத்தவேண்டும் என்ற ஆசையில் அந்த பொய்யை சொல்லவேண்டியதாயிற்று.

பயிற்சியை முடித்ததும் எனக்கு ஆசிரியை பணி கிடைத்தது. அப்போது என் கணவர் அரசு பணியில் மனதிருப்தி ஏற்படாததால் அதை உதறிவிட்டு சுயதொழில் செய்யத் தொடங்கினார். நாங்கள் சென்னைக்கு வந்தோம். எங்களுக்கு குழந்தைகள் பிறந்தனர். மூத்த மகளுக்கு உயிரோவியம் என்று பெயர் சூட்டினார். உலக தத்துவஞானிகள் மீது என் கணவருக்கு இருந்த பற்றுதல் காரணமாக மகன்களுக்கு இங்கர்சால், சாக்ரடீஸ், நெப்போலியன் என்றும் பெயர் வைத்தார். எங்கள் கடைசி மகள் பெயர் அமுதா. எங்கள் மகன்களை அவர்அவரே சுயமாக உழைத்து படிக்கவேண்டும் என்றார். அவர்கள்அனைவரும் சாதாரண படிப்பிற்கான வேலையில் சேர்ந்துகொண்டு, மேலும் படித்து, வெளிநாடுகளில் உயர்ந்த பணிகளில் இருக்கிறார்கள். என் மகன் சாக்ரடீஸ் சிகாகோவில் எம்.எஸ். பொருளாதாரம் பயின்று, அதற்கான உயரிய விருதான மார்ஷெல் விருதினை பெற்றிருக்கிறார். இளைய மகள் அமுதா கட்டிடக்கலைத் துறையில் தங்கப்பதக்கம் பெற்றவர். உயர்படிப்பிற்கான தேர்வில் தேசிய சாதனையும் படைத்திருக்கிறார். என் கணவர் நினைத்ததுபோல் எங்கள் குழந்தைகளுக்கு அறிவையும், நம்பிக்கையையும் கொடுத்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் சொந்தக்காலில் நின்று சாதனையாளர்களாக உருவாகிவிட்டார்கள் என்று கூறும்போது லேசாக அவையாம்பாளின் கண்கள் கலங்குகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 82-வது வயதில், நம்பிக்கை நாயகனான கிருஷ்ணமூர்த்தி மரண மடைந்திருக்கிறார். அவர் தனது இறுதி ஆசையில், எல்லோருக்கும் மகன்கள்தான் கொள்ளிவைப்பார்கள். தனக்கு மகள் கொள்ளிவைக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அதன்படியே அவருக்கு இளைய மகள் அமுதாவே சுடுகாடு வரை சென்று இறுதி காரியங்களை செய்திருக்கிறார்.

சென்னை அம்பத்தூரில், பகுத்தறிவு பண்ணை என்ற பெயரில் அமைந்திருக்கும் வீட்டில் இவர்கள் வசித்து வருகிறார்கள். வீட்டை சுற்றிலும் பசுமை படர்ந்திருக்கிறது. வித்தியாசமான பூஞ்செடிகள் பூத்திருக்கின்றன. அதை வளர்த்திருக்கும் முறையில் ஒரு புதுமை தெரிகிறது. பலா மரத்தில் வேரில் இருந்தே பிஞ்சுக் காய்கள் தொங்குகின்றன. வீட்டின் உள்ளே தெரியும் கலை நேர்த்தியும் கண்களை ஈர்க்கிறது.

என் மகள் அமுதா பார்க்கிற இடத்தை எல்லாம் கலையால் அலங்காரம் செய்துவிடுவார். ஆர்க்கிடெக்ட் கல்வியில் சாதனை படைத்து கட்டிடக்கலை பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்று மகளை பெருமிதத்தோடு அறிமுகம் செய்கிறார், அவையாம்பாள்.

நாற்பது வயதான அமுதாவும் நம்பிக்கையை மூலதனமாக்கி சாதனை படைத்தவர். அவர், தான் கடந்து வந்த பாதையை விவரிக் கிறார்..!

நான் தஞ்சையில் பள்ளிப் படிப்பை முடித்தேன். சிறு வயதிலே நன்றாக ஓவியம் வரைவேன். மேடை பேச்சிலும் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறேன். சிறுவயதில் நாங்கள் குடிசையில்தான் வாழ்ந்து வந்தோம். அப்போதே நான் புதுமையான முறைகளில் பிரமாண்டமான வீடுகளை ஓவியங்களாகத் தீட்டுவேன். அதை எல்லாம் பார்த்துவிட்டு என் தந்தை என்னை கட்டிடக்கலை தொடர்புடைய கல்வியை படிக்கும்படி கூறினார். அதில் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்றும் நம்பினார். அதனால் தஞ்சை பெரியார் மணியம்மை பெண்கள் கல்லூரியில் பி.ஆர்க். படிக்க சேர்ந்தேன். அங்கு தங்கப்பதக்கத்தோடு சிறந்த மாணவிக்கான விருதுகளையும் பெற்றேன்.

அந்த காலகட்டத்தில் மத்திய அரசு இ.எப்.ஐ.பி என்ற கல்வித்திறன் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை தேசிய அளவில் நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் பி.ஆர்க். கல்வியில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசே எம்.ஆர்க். படிக்க அனுமதியளிக்கும். படிக்கும் காலகட்டத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கும். அவர்கள் படித்து முடித்ததும் ஏதாவது ஒரு கட்டிடக்கலை கல்வி நிறுவனத்தில் சேர்த்து மூன்று ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. சிறந்த மாணவர்களை, ஆசிரியர் களாக மாற்றி, அவர்கள் மூலம் ஆற்றல் நிறைந்த மாணவர்களை உருவாக்குவது இந்த கல்வித்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

அதற்காக இந்தியா முழுவதும் இருந்து 200 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவைகளை பல்வேறு கட்டங்களாக நடத்தினார்கள். 85 பேர்களை தேர்ந் தெடுப்பதற்கான அந்த தேர்வுகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், பின்பு பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களிலும் நடந்தது. இறுதித் தேர்வு டெல்லியில் உள்ள கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்ட் மையத்தில் நடந்தது. முடிவை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஒன்றன்பின் ஒன்றாக 84 பேர் பெயர்களை வாசித்தார்கள். என் பெயர் அதில் இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com