ரூ.2½ கோடியில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாக திறப்பு விழா காணாத சமத்துவபுரம்

பள்ளிப்பட்டு அருகே ரூ.2 கோடியே 45 லட்சத்தில் கட்டப்பட்ட சமத்துவபுரம் 10 ஆண்டுகளாக திறப்புவிழா காணாமல் கிடக்கிறது.
ரூ.2½ கோடியில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாக திறப்பு விழா காணாத சமத்துவபுரம்
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2010-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.2 கோடியே 45 லட்சத்தில் சமத்துவபுரம் அமைக்க ஆணையிட்டார்.

இதையடுத்து அங்கு 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. சாலை, குடிநீர், நூலகம், சிறுவர்களுக்கு பூங்கா, மின்வசதி, தெருவிளக்கு, பகுதி நேர ரேசன் கடை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நுழைவு வாயிலுக்கு இரும்பு கேட் வசதி செய்யப்பட்டது.

இந்த சமத்துவபுரத்தை அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைப்பதாக இருந்தது. அதற்குள் சட்டமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அதனால் சமத்துவபுரம் திறப்புவிழா நடக்கவில்லை. தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார்.

அதன் பின்னர் சமத்துவ புரம் திறப்புவிழா நடைபெறவில்லை. 2017 தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சமத்துவபுரம் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் திறப்புவிழா காணவில்லை.

இதனால் இங்கு கட்டப்பட்ட வீடுகள் சேதம் அடைந்து வருகின்றன. வீடுகளுக்கு அமைக்கப்பட்ட வாசக்கால், ஜன்னல் கதவுகள் பாழாகி வருகின்றன. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகளும், அவற்றிற்கு நீர் ஏற்ற அமைக்கப்பட்ட மின்மோட்டார்களும் பயனற்று கிடக்கின்றன.

இதை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற மாதிரி பழுதுகளை நீக்கி, பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com