மாமியார்-மருமகள் ஒற்றுமைக்கு...

மாமியார்-மருமகள் உறவு எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
மாமியார்-மருமகள் ஒற்றுமைக்கு...
Published on

குடும்பத்தில் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாக இருந்தால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும். இருவரும் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, உண்மையான அன்பு, பொறுமை போன்ற குணங்களுடன் நடந்துகொண்டால், அங்கு சண்டைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் இடம் இல்லாமல் போகும்.

இந்தக் கணினி காலத்தில் கூட மாமியார், மருமகள் என்றால் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், மாமியாருக்கு சேலை கட்டி விடக்கூடிய மருமகள்களும், மருமகளுக்கு மல்லிகைப்பூ வைத்து விடக்கூடிய மாமியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மாமியார்-மருமகள் உறவு எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம்.

புரிந்து கொள்ளுதல்:

நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு வருங்கால கணவனுடன் மொபைல் போனில் பேசி, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது தற்போது நடைமுறையில் உள்ளது. அதுபோல வருங்கால மாமியாரும், மருமகளும் அவ்வப்போது பேசி வந்தால், ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்துகொள்ள முடியும். விருப்பங்கள், பிடித்தவை, பிடிக்காதவை என்ன என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். இது திருமணத்துக்குப் பின்பு இருவரும் நல்லமுறையில் உறவை வளர்ப்பதற்கு உதவும்.

ஈகோ வேண்டாம்:

இத்தனை நாளாக தான் மட்டுமே குடும்பத்தை நிர்வகித்து வந்த மாமியாருக்கு, திடீரென மருமகள் பொறுப்புகளை கையில் எடுத்துக்கொள்வது சங்கடத்தை ஏற்படுத்தலாம். மருமகள் அந்த உணர்வை புரிந்துகொண்டு நிலைமையை இயல்பாக்குவதற்கு சற்றே கால அவகாசம் கொடுப்பது நல்லது. மாமியார் மற்றும் மருமகள் இடையே ஈகோ வராமல், இருவரும் சமமாக பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.

பிறந்த வீட்டு பெருமை பேச வேண்டாம்:

மருமகள்கள் தங்கள் வீட்டுப் பெருமையை பேசுவதைத் தவிர்த்து, புகுந்த வீட்டு உறவுகளுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால் உங்கள் உறவு மேம்படும்.

மட்டம் தட்டுதலைத் தவிர்த்தல்:

மாமியார்கள் தங்கள் மருமகளை மட்டம் தட்டாமல், அடுத்த குடும்ப நபர்களுடன் ஒப்பிட்டுப் பேசாமல், அவர்களின் மனநிலையை அறிந்து, தன் மகளைப் போல் பார்த்துக்கொண்டால் எந்தவிதமான பிரச்

சினையும் ஏற்படாது.

விட்டுக்கொடுங்கள்:

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி போட்டி, பொறாமை இல்லாமல் விட்டுக் கொடுத்துப் போனால் நிச்சயமாக உங்கள் உறவு மேம்படும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வாழ்த்துக்களை பரிமாறவும்:

கணவன், மனைவி, குழந்தை என தனிக்குடித்தனம் இருப்பவர்கள் பிறந்தநாள், திருமணநாள், பண்டிகைகள் போன்ற முக்கிய தினங்களில் மாமனார், மாமியாரிடம் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெறும்போது உங்கள் உறவின் வலிமை அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com