இரிடியம் விற்ற பணத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி, 6 பேர் கைது

இரிடியம் விற்ற பணத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரிடியம் விற்ற பணத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி, 6 பேர் கைது
Published on

கோவை,

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் வீரவிஜயன். இவருடைய மனைவி ஷர்மி (வயது 34). இவருடைய பெற்றோர் ஈரோட்டில் அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மி ஈரோடு சென்ற போது அங்கு அழகு நிலையத்துக்கு வந்த ஈரோட்டை சேர்ந்த பூங்கொடி(42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது பூங்கொடி, ஷர்மியிடம் தான் மகளிர் அமைப்பு நடத்தி வருவதாகவும் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் கடனாக ரூ.1 லட்சம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறினார். மேலும் இரிடியம் விற்ற பணம் ரூ.40 ஆயிரம் கோடி ரஷியா நாட்டில் இருந்து தனக்கு வர வேண்டியுள்ளது. அந்த பணத்தை பெற வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கிக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தி விட்டால் ரூ.40 ஆயிரம் கோடி கிடைத்து விடும்.

உங்களால் எவ்வளவு பணம் தர முடியுமோ அதை கொடுங்கள். ரஷியா நாட்டில் இருந்து பணம் வந்ததும் உங்களுக்கு குறிப்பிட்ட தொகையை பங்கு தருவதாக பூங்கொடி கூறினார். இதை நம்பிய ஷர்மி பூங்கொடியிடம் ரூ.3 லட்சம் கொடுத்தார். மேலும் ரூ.65 லட்சம் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பூங்கொடி கூறினார்.

இது பற்றி ஷர்மி தனது கணவரிடம் கூறினார். உடனே அவர் இது மோசடி வேலை. எனவே பணம் கொடுக்க வேண்டாம். போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர்கள், போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சோமசேகர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து, இரிடியம் மோசடி கும்பலை பிடிக்க திட்டமிட்டனர்.

இதற்காக ஷர்மியின் மூலம் ரூ.65 லட்சம் தருவதாக கூறி மோசடி கும்பலை கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு போலீசார் வரவழைத்தனர். அந்த கும்பல் அங்கு வந்ததும், பதுங்கி இருந்த தனிப்படை போலீசார் மோசடி கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

இந்த மோசடி தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த பூங்கொடி, அவருடைய கணவர் மோகன்குமார், சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (28), ஜான் சாமி பிள்ளை என்ற முருகன் (30), திருவள்ளூரை சேர்ந்த குப்பன்ராஜ் (42), வேலூரை சேர்ந்த தேவகுமா ர்(46) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து உதவி கமிஷனர் சோமசேகர் கூறியதாவது:-

மோசடி கும்பலின் தலைவராக பூங்கொடி செயல்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருப்பூர், பெருமாநல்லூரில் மோசடி வழக்கில் கைதான ராணி என்பவருடன் சேர்ந்து 2 ஆண்டுகள் பெருந்துறை பகுதியில் பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.

மேலும் பூங்கொடி தனது கூட்டாளிகள் சதீஷ்குமார், முருகன், குப்பன் ராஜ், தேவகுமார் ஆகியோருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு அவ்வப்போது மோசடிகளை அரங்கேற்றி வந்தார். இதன் மூலம் அவர் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். பூங்கொடி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com