பிளஸ்-1 தமிழ் தேர்வு எளிதாக இருந்தது

பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது.
பிளஸ்-1 தமிழ் தேர்வு எளிதாக இருந்தது
Published on

பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது. இந்த தேர்வு பற்றி விருதுநகர் மாவட்டத்தை சர்ந்த மாணவ-மாணவிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

நம்பிக்கை

விருதுநகரை சேர்ந்த மாணவி திவ்யபாரதி கூறுகையில், இந்த ஆண்டு எங்களுக்கு பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. பிளஸ்-1 தமிழ்த்தேர்வு எழுதினேன். வினாக்கள் எளிதாக இருந்தது. அதற்கு நாங்கள் ஏற்கனவே பல திருப்புதல் தேர்வு எழுதி பயிற்சி எடுத்ததால் பொதுத்தேர்வு என்ற பயமே இல்லாமல் இருந்தது. இம்முறை பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்த பள்ளி கல்வித்துறைக்கு நன்றி.

மகிழ்ச்சி

அருப்புக்கோட்டையை சேர்ந்த பவேஷ் கூறுகையில், பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்த்தேர்வில் 3 வினாக்களை தவிர மற்ற வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. புத்தகங்களை நன்கு படித்து பயிற்சி எடுத்திருந்ததால் தேர்வு எழுத எளிதாக இருந்தது. அந்த வகையில் தமிழ் தேர்வு நல்ல முறையில் எழுத வாய்ப்பு கிடைத்தது.

அச்ச உணர்வு

ராஜபாளையத்தை சேர்ந்த சுப்ரியா:- கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாமல் இந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவது ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியது. தேர்வு எழுத தொடங்கும் போது ஒரு பயம் இருந்தது. ஆனால் வினாத்தாளை பார்த்த பிறகு மிக எளிதாக இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். வருகிற தேர்வும் இதேபோல் எளிதாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறோம்.

100 சதவீத மதிப்பெண்

புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த அருண்:-

முதன் முதலில் பொதுத்தேர்வு எழுதுவதால் சிறிது பதற்றமாக இருந்தது. வினாத்தாளை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.

வத்திராயிருப்பை சேர்ந்த செந்தூர ஸ்ரீமான்:-

பொதுத்தேர்வை எதிர்கொள்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தேர்வு வினாக்கள் மிகவும் எளிமையாக கேட்கப்பட்டு இருந்ததால் எங்களால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடிந்தது. இதனால் அதிக மதிப்பெண்கள் பெறுவது உறுதி.

ஊக்கம்

வத்திராயிருப்பை சேர்ந்த ரோகித்சங்கர் ராம்:-

தேர்வுக்கு முன்னர் பயமாக இருந்தது. பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் தேர்வு எழுதினேன். தமிழ் வினாத் தாள் மிகவும் சுலபமாக இருந்தது. பல கேள்விகள் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டிருந்து. இதனால் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க முடிந்தது.

எதிர்கோட்டயை சேர்ந்த சரண்யா:-

என்னுடைய ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி பாடங்களை நன்றாக படித்ததால் தமிழ்த்தேர்வு நன்றாக எழுதினேன். வினாக்கள் மிகவும் எளிதாக இருந்ததால் எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை.

திருமலாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி:- கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவில்லை. முதல் முறையாக இந்த ஆண்டு தான் அரசு பொதுத்தேர்வு எழுதியுள்ளோம். எதிர்பார்த்ததை விட தமிழ்த்தேர்வு சுலபமாக இருந்தது.

இவ்வாறு மாணவ-மாணவிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com