ரத்னகிரி அருகே கோர விபத்து ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி 8 பயணிகள் பலி - 7 பேர் படுகாயம்

ரத்னகிரி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 8 பயணிகள் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர்.
ரத்னகிரி அருகே கோர விபத்து ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி 8 பயணிகள் பலி - 7 பேர் படுகாயம்
Published on

மும்பை, 

ரத்னகிரி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 8 பயணிகள் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஆட்டோ மீது மோதிய லாரி

ரத்னகிரி மாவட்டம் கர்னாய் பகுதியை சேர்ந்தவர் ஷேர் ஆட்டோ டிரைவர் அனில் பாபி சாரங். இவர் நேற்று முன்தினம் மாலை தபோலி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்னாய் நோக்கி சென்றார். ஆட்டோவில் அவருடன் சேர்ந்து 15 பேர் பயணம் செய்தனர். ஆட்டோ தபோலி - கர்னாய் ரோட்டில் ஆசுட் பகுதியில் சென்றபோது தவறான பாதையில் எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் ஆட்டோ சாலையின் மறுமுனைக்கு தூக்கி வீசப்பட்டது. விபத்தில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

8 பேர் பலி

டாக்டர்கள் பரிசோதனையில் ஆட்டோ டிரைவர் அனில் பாபி சாரங் (45), பயணிகள் மரியம் (6), சுவாரா (8), சந்தேஷ் (55), பாரா தவுபிக் (27) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும் வந்தனா (38), மீரா மகேஷ் (22), சமியா (55) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர். பலியானவர்கள் தபோலியில் உள்ள அதாகல், படலே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் காயமடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான ஆட்டோ டிரைவர் அனில் பாபி சாரங்கின் மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாட தந்தை வருகைக்காக காத்திருந்த மகன், குடும்பத்தினருக்கு ஆட்டோ டிரைவரின் மரண செய்தி மீளா துயரத்தை அளித்து உள்ளது. இந்தநிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர், கிளீனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com