அரசின் நிவாரண பொருட்கள் கேட்டு கிராம மக்கள் 4 மணி நேரம் சாலைமறியல்

அரசின் நிவாரண பொருட்கள் கேட்டு கிராம மக்கள் 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அரசின் நிவாரண பொருட்கள் கேட்டு கிராம மக்கள் 4 மணி நேரம் சாலைமறியல்
Published on

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் அதிகமாக பாதித்த பகுதிகளில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளும் உள்ளன. தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆளுங்கட்சியை சேர்ந்த நார்த்தாமலை ஆறுமுகம் உள்ளார். இவர், கடந்த மாதம் புயல் சேதத்தை பார்வையிட வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமே அதிகாரிகள் சரிவர கணக்கெடுக்கவில்லை என்று நேரிலேயே புகார் அளித்தார். ஆனால், அவரே அந்த தொகுதிக்கு முழுமையாக சென்று புயல் பாதித்த மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று கந்தர்வகோட்டை அருகே கறம்பக்குடி-கந்தர்வகோட்டை சாலையில் காட்டுநாவல் கிராமத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் முறையாக அதிகாரிகள் கணக்கெடுக்கவில்லை என்றும், அரசின் 27 நிவாரண பொருட்கள் அடங்கிய பை வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். கறம்பக்குடி-கந்தர்வகோட்டை சாலையில் காலை 8 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் உடனடியாக தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இங்கு வந்து பதில் சொல்ல வேண்டும். அதுவரை மறியலை கைவிடுவதில்லை என்றனர்.

இந்த மறியலில் காட்டு நாவல், செட்டிக்காடு, கல்லுக்கொல்லை, துலக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண் மற்றும் ஆண்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

மேலும் அவ்வழியாக கறம்பக்குடியில் இருந்து கந்தர்வகோட்டைக்கு வரக்கூடிய டவுன் பஸ்களையும் கிராம மக்கள் சிறைபிடித்தனர். போராட்டம் தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் ஏட்டுகள் ராஜா தயாளன், அருள் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பொதுமக்களோ நிவாரண பொருட்கள் தரக்கூடிய வருவாய்த்துறை அதிகாரி யாராவது வந்து பதில் சொல்லட்டும். அதன் பின்னர், எங்கள் முடிவை தெரிவிக்கிறோம் என்றனர். நேரம் செல்ல..செல்ல போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் காலையில் சாப்பிடாததால் மயங்கி விழுந்தனர். அதன் பின்னர் சாலையிலேயே அடுப்பு வைத்து சமையல் செய்யும் போராட்டத்தை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம், 4 மணிநேரமாக நீடித்த நிலையில், பகல் 12 மணிக்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் அங்கு வந்தார். அவர் நிவாரண உதவி வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுபோல கந்தர்வகோட்டை பகுதியில் குளத்து நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடி காடு ஆகிய 3 கிராமங்களிலும் அரசின் நிவாரண பொருட்கள் கேட்டு கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com