சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் அரசு பஸ்கள்

நாளை முதல் இயக்கப்படுவதற்காக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் அரசு பஸ்கள் உள்ளன.
சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் அரசு பஸ்கள்
Published on

பெரம்பலூர்:

ஊரடங்கினால்...

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பஸ்கள் ஓடவில்லை. பின்னர் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கினால், முன்னதாக 22, 23-ந் தேதிகளில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு பஸ்கள் இயக்கப்படாததால் அரசு பஸ்கள் அந்தந்த போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட 3-வது வகையில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும், மாவட்டங்களுக்கிடையே மட்டும் கடந்த 21-ந்தேதி முதல் பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

23 மாவட்டங்களில்

ஆனால் 2-வது வகை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நாளையுடன் (திங்கட்கிழமை) ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், வருகிற 5-ந் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் 2-வது வகையில் உள்ள 23 மாவட்டங்களிலும், மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்களை 50 சதவீத பயணிகளுடன் இயக்கவும் அரசு உத்தரவிட்டது.

தயார் நிலையில் அரசு பஸ்கள்

இதனால் நேற்று பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் சுத்தம் செய்யும் பணியிலும், பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், குறைபாடுகள் உள்ள பஸ்சை கண்டறிந்து, அதனை சரி செய்யும் பணியிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது நாளை முதல் இயக்க அரசு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

தடுப்புகள் அகற்றம்

அரியலூர் மாவட்டத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதையொட்டி அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை உரிமையாளர்கள் சுத்தம் செய்து வர்ணங்கள் பூசி வருகின்றனர். பஸ் நிலைய நுழைவு வாயிலில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டன. தூய்மை பணியாளர்கள் பஸ் நிலைய வளாகம் முழுவதும் கூட்டி சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்தனர். 55 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com