

குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே வீட்டு முன்பு தூங்கிய மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள நெடுமருதி கிராமத்தை சேர்ந்தவர் சூடம்மா (வயது65). இவரது கணவன் முனியப்பா இறந்து விட்டதால் அவர் தனது மகன் திம்மராஜ்(40), மருமகள் சரஸ்வதி(35) ஆகியோருடன் அதேபகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள். சூடம்மா வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் நேற்று காலை மகன் திம்மராஜ் எழுந்து வந்தபோது சூடம்மா பேச்சு, மூச்சு இன்றி கிடந்தார். இதனால் அவர் சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்த போது சூடம்மா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனதும் தெரிந்தது.
விசாரணை
இந்த கொலை குறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்தமிழ் செல்வராசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.
அவர்கள் சூடம்மாவின் மகன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது நகைக்காக மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சூடம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இந்த கொலை தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
குருபரப்பள்ளி அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.