

மனித உடலால், நார்ச்சத்தை ஜீரணிக்க முடியாது. ஏனெனில் உணவு நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட் வகையை சேர்ந்ததாகும். பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டு விடும். ஆனால் நார்ச்சத்தை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது.
அதேவேளையில் குடலில் வாழும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நார்ச்சத்தை நொதித்து தங்களுக்கான உணவாக மாற்றிக்கொள்ளும். அப்படி நார்ச்சத்து நொதிக்கப்படும்போது செரிமானத்துக்கும் உதவி செய்யும். ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும். எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.
இந்த நார்ச்சத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து. மற்றொன்று கரையாத நார்ச்சத்து. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து ஜெல் போன்ற பொருளை உருவாக்கும். அந்த ஜெல் உடலில் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும். கரையாத நார்ச்சத்தானது தண்ணீரில் கரையாது. இருப்பினும் செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் துணை புரியும்.
நார்ச்சத்தை உடலால் ஜீரணிக்க முடியாது என்பதற்காக அதனை குறைவாக உட்கொள்வது நல்லதல்ல. உடலில் நார்ச்சத்து அளவு குறையும்போது குடலில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். அதனால் குடல் ஆரோக்கியம் கெடும்.
நார்ச்சத்து குறைபாடு அல்லது குறைவாக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதால் நாள்பட்ட மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். ஒழுங்கற்ற குடல் அசைவுகள் மற்றும் வீக்கம், வயிற்று வலி மற்றும் மூல நோய் போன்ற இரைப்பை குடல் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
இது நிலையற்ற ரத்த சர்க்கரை அளவுகள், கொழுப்பு அதிகரித்தல், சக்தி குறைபாடு, டைப்-2 நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற நீண்டகால உடல் உபாதைகளுக்கும் வழிவகுத்துவிடும்.