இந்தி மொழி சர்ச்சை.. பிரபல நடிகர்கள் மோதல்

விஸ்பரூபமாக மாறிய இந்தி சர்ச்சையில் பிரபல நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.
இந்தி மொழி சர்ச்சை.. பிரபல நடிகர்கள் மோதல்
Published on

கன்னட நடிகர் கிச்சா சுதீப் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் கன்னடப் படமான கே.ஜி.எப்.2 பான் இந்திய படமாக உருவாகி இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுதீப், கன்னடா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகி விட்டன. எனவே இந்தி இனி ஒரு போதும் தேசிய மொழியாக இருக்க முடியாது என்று கூறினார்.

சுதீப்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சமூக வலைத்தளத்தில் இந்தி மொழியில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, இந்தி தேசிய மொழி இல்லை என்றால் உங்கள் தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இந்தி தான் நமது தேசிய மொழியாக இருந்தது இருக்கிறது, இனிமேலும் இருக்கும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இதற்கு கன்னட நடிகர் கிச்சா சுதீப் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார். அதில் இந்தியை மதித்து நேசித்து கற்றுக் கொண்டு இருந்ததால் அவர் இந்தியில் எழுதி இருந்தது எனக்கு புரிந்தது. ஒரு வேளை கன்னடத்தில் தான் பதிவிட்டு இருந்தால் அதை எப்படி புரிந்து கொள்வீர்கள் என்று அஜய் தேவ்கனுக்கு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த அஜய் தேவ்கன், நான் தவறாக புரிந்து கொண்டதை தெளிவுப்படுத்தியதற்கு நன்றி. திரை உலகத்தை ஒன்றாகவே நினைக்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கிறேன். தங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறு இந்தி மொழி தொடர்பாக கன்னட நடிகர் சுதீப்புக்கும், இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அஜய் தேவ்கனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com