இரிடியம் விற்க முயன்ற விவகாரம்: ஆட்டோ டிரைவரை கடத்திய 4 பேர் கைது

அரூர் அருகே, இரிடியம் விற்க முயன்ற விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரிடியம் விற்க முயன்ற விவகாரம்: ஆட்டோ டிரைவரை கடத்திய 4 பேர் கைது
Published on

அரூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் பழனி (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி மாலை அரூர் அருகே அனுமன்தீர்த்தத்தில் இருந்து கடத்தப்பட்டதாக அவருடைய உறவினர் குருநாதன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரில், கடந்த 12-ந் தேதி பழனி, சீனிவாசன் என்பரிடம் பேசிவிட்டு வரலாம் என கூறி என்னையும் அழைத்து சென்றார். சீனிவாசனிடம் பேசி கொண்டிருந்தபோது சிலர் பழனியை காரில் கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பவுலோஸ் நடத்திய விசாரணையில் பழனி, சேலத்தை சேர்ந்த சிலரிடம் இரிடியம் சொம்பு தருவதாக கூறி பணம் பெற்றுகொண்டு இரிடியம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் ஆத்திரமடைந்தவர்கள் பழனியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பழனியை கடத்திய சேலம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (33), நித்யகார்த்திகேயன் (35), மோகன் (23), மணிகண்டன் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல இரிடியம் விவகாரம் தொடர்பாக பழனியும் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மேலும் இருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிடிபட்டால் மேலும் சில விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com