தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்துவது குறித்து பதில் அளிக்க வேண்டும்; மத்திய–மாநில தொல்லியல் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்துவது குறித்து மத்திய, மாநில தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்துவது குறித்து பதில் அளிக்க வேண்டும்; மத்திய–மாநில தொல்லியல் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:

1902ம் ஆண்டில் பிரிட்டீஷ் தொல்லியல் ஆராய்ச்சியாளர் அலெக்சான்டரியா, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டார். அப்போது தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தமிழர்களின் தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தாமிரபரணி ஆற்றுப்படுகை முழுவதும் பரவி இருக்கிறது என்று சான்றுகளுடன் நிரூபித்தார். மேலும் அவரது குறிப்புகளில், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 37 இடங்களை அகழாய்வு செய்தால் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் மற்றும் தொன்மையான பொருட்கள், வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்கும். குறிப்பாக, ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, காயல்பட்டினம், வல்லநாடு, பாலாமடை, கருங்குளம் உள்ளிட்ட 37 இடங்களில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது வரை அங்கு உரிய ஆய்வு நடத்தப்படவில்லை. ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு அலெக்சான்டரியாவின் வரைபடங்கள் மூலம் அகழாய்வு நடந்தது. எனவே தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்ளிட்ட 37 இடங்களில் அகழாய்வு செய்வது குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 25ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com