அரும்பாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு

அரும்பாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு

அரும்பாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு காணப்பட்டது.
Published on

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நகரில் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது.

இந்தநிலையில் அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவில் நேற்று சாலையின் ஒருபகுதி மேடு பள்ளமாகவே காணப்பட்டது. அப்போது திடீரென்று சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு, அந்த பகுதி அப்படியே பூமிக்குள் சென்றது. திடீரென்று பயங்கர சத்தத்துடன் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் வாகன ஓட்டிகளோ, பாதசாரிகளோ யாரும் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. மேற்கொண்டு அந்த சாலையில் வாகனம் செல்லாத வகையில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து திருவீதி அம்மன் கோவில் தெரு நோக்கி செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு, அத்தெருவும் அடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com