திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை. இதுவரை சுமார் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியில் நேற்று காலையில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடியது.

மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட 28 மற்றும் 47-வது வார்டு குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்ற கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த வெள்ளாளர் தெரு, முனியப்பன் கோவில் தெரு பொதுமக்கள் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியில் நேற்று சாலையின் குறுக்கே கயிறு கட்டி மறியலில் ஈடுபட்டனர். எனவே அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குழாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திண்டுக்கல் பாறைமேட்டு தெரு, நரிப்பாறை தெரு ஆகிய பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நாகல்நகர் ரவுண்டானா அருகே காலிக் குடங் களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அங்குவிலாஸ் இறக்கத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சிறிது நேரத்திலேயே, நாகல்நகரிலும் மறியல் போராட்டம் நடந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com