குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்தது. இடை இடையே பலத்த மழையும் பெய்தது. குற்றாலம் மலைப் பகுதியிலும் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயினருவியில் முன்புறம் உள்ள பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 30-8-2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார். அதன்படி தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குற்றாலத்தில் ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தற்போதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில தற்காலிக கடைகள் மட்டும் கடந்த 3 நாட்களாக திறக்கப்பட்டுள்ளன. குற்றாலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருவியை பார்ப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு வந்து அந்தக் கடைகளில் பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் படகு குழாம் உள்ளது. இங்கு குற்றால சீசனின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகு சவாரி நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த படகு குழாமில் தண்ணீர் நிறைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com