குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் ராஜ் தாக்கரே சொல்கிறார்

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் ராஜ் தாக்கரே சொல்கிறார்
Published on

தானே,

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தானே மாவட்டம் கல்யாணில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றியில் 50 சதவீத பாராட்டையும், புகழையும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்திக்கு சமர்ப்பிக்க வேண்டும். காரணம், பிரசாரத்தின் போது அவர் மோடியை எள்ளி நகையாடிய விதம், பொதுமக்களை சரியாக சென்றடையவில்லை. மோடி தேர்தலில் வெற்றி பெற இது உதவிகரமாக அமைந்தது.

குஜராத்தில் சமீபத்திய நிகழ்வுகள், ஆளும் கட்சி (பா.ஜனதா) தோல்வி அடைவதையே காட்டுகிறது. மேலும், பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசும்போது பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக எழுந்து வெளியேறுவதை வீடியோக்களில் காண முடிகிறது. இது போல் ஒருபோதும் நிகழ்ந்தது கிடையாது.

இதையும் மீறி, குஜராத்தில் பாரதீய ஜனதா 150க்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்றால், அதனை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நிகழ்த்தப்பட்ட அதிசயமாக தான் பார்க்க வேண்டும். அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே, குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷன் தள்ளிப்போட்டது. தேர்தல் கமிஷனும், மற்ற சட்டமுறை அமைப்புகளும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆனால், இங்கு அது நடக்கவில்லை.

இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

மும்பையில் ரெயில் நிலைய நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்த நடைபாதை வியாபாரிகளை நவநிர்மாண் சேனா தொண்டர்கள் வலுக்கட்டாயமாக அகற்றியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவர்களை மாநகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றி இருக்க வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக அதை செய்ய மாநகராட்சி முன்வரவில்லை. நவநிர்மாண் சேனா தொண்டர்கள் ஆற்றிய சேவைக்காக அவர்கள் பாராட்டப்படவில்லை என்று ராஜ் தாக்கரே பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com