விழுப்புரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குறிப்பாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் 2 மணி நேரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுவதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தினம், தினம் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், கடந்த 28-ந் தேதி மாலை விழுப்புரம் வழுதரெட்டி புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனால் அதன் பிறகு 5 நாட்களாகியும் வழுதரெட்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.40 மணியளவில் காலி குடங்களுடன் விழுப்புரம் வழுதரெட்டி புறவழிச்சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன் பிறகு காலை 10.50 மணியளவில் பொதுமக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்காவிடில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வழுதரெட்டி பகுதியில் தினமும் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதே நேரத்தில் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் சிலர், மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com