

திருவள்ளூர்,
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட தலைவர் கேசவன், மாநில பொதுச்செயலாளர் தனசேகர், மாநில செயலாளர் மாரி, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி முகமது மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பணி வரன்முறைபடுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பான பணி நிலைமையை ஏற்படுத்த வேண்டும், பாதுகாப்பற்ற கடைகள் மூடல் போன்றவற்றை சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.