

ஆன்டிகுவா,
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் ஆன்டிகுவாவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முடிவில் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் 190 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. சிறப்பாக ஆடிய ஷேக் ரஷீத் அரை சதம் (50) விளாசினார். அவரைத்தொடர்ந்து அதிகபட்சமாக ராஜ் பாவா (35) ரன்களில் வெளியேறினார். முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிஷாந்த் 50 ரன்களும், தினேஷ் (13) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ரன்களை சேர்த்து வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது.
இந்நிலையில் 5வது முறையாக ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நமது இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஜசிசி ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். தொடர் முழுவதும் அவர்கள் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கைகளில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.என்று அதில் மோடி பதிவிட்டுள்ளார்.