பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்

சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளை கையாளும் பணிகள் வரை செய்தவர் ரத்தன் டாடா.
பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்
Published on

மும்பை,

இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86.  இந்நிலையில் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்புகாரணமாக அவர் நேற்று நள்ளிரவு காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உழைப்பு, தன்னம்பிக்கையால் ரத்தினமாக ஜொலித்த டாடா

நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937 டிசம்பர் 28-ல் சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த ரத்தன் டாடா ஐ.பி.எம்.இல் பணிக்கு சேர்ந்தார். தேசம் மீதான பற்றால் இந்தியா திரும்பிய டாடா தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் களம் இறங்கினார். டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்து தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார் ரத்தன் டாடா. டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச்சென்றார்.

டாடா குழும தலைவராக உருவெடுத்த ரத்தன் டாடா

டாடா குழுமத்தில் பணியாற்றிய ரத்தன் டாடா பல ஆண்டு அயராத உழைப்பிற்கு பிறகே உயர் பதவியை ஏற்றார். சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளை கையாளும் பணிகள் வரை செய்தவர் ரத்தன் டாடா. 1991-ல் டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்ற பின் நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்தது. ரத்தன் டாடாவின் தலைமையின் கிழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது டாடா குழுமம்.டாடா குழுமத்தின் தலைவராக 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். வாகனம், ஐ.டி, இரும்பு, தொழில்துறை என பலவற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க ரத்தன் டாடா பங்காற்றினார். நடுத்தர மக்களின் வாகனக்கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா. தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன், விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார். நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா தன்னம்பிக்கையால் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர். தன்னம்பிக்கை, உழைப்பு, அறிவு, தொழில் திறன், அற சிந்தனைக்காக அறியப்பட்டவர் ரத்தன் டாடா.  தொழிலதிபர் ரத்தன் டாடா கொரோனா நிவார்ண பணிகளுக்காக ரூ.1,500 கோடி வழங்கி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com