இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேர் காயம்

இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேர் காயம்
இன்ஸ்பெக்டர் உள்பட 22 பேர் காயம்
Published on

திருவெறும்பூர், ஏப்.26-
திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடியில் தில்லை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 461 ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்பட்ட காளைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு காளை உதைத்ததில் அவர் காயமடைந்தார். முன்னதாக மாடுபிடிவீரர்களுக்கு நவல்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் மருத்துவ குழுவினர் உடற்தகுதி பரிசோதனை செய்தனர். மேலும் மாடுகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டிற்காக கொண்டு வரப்பட்ட காளைகளை, கால்நடை மருத்துவ இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது காளைகளை இடையில் கொண்டு வந்ததால், மருத்துவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து பகல் 12.15 மணி அளவில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. இதனால் காளைகளுடன் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏராளமானோர் திரும்பி சென்றனர். இருப்பினும் மீண்டும் மதியம் 2.10 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கி 3.25 மணிக்கு முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com