ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 28 பேர் காயம்

மண்ணச்சநல்லூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 28 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 28 பேர் காயம்
Published on

சமயபுரம், மே.18-
மண்ணச்சநல்லூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 28 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் பங்கேற்றன.
முன்னதாக மண்ணச்சநல்லூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாடு பிடிக்கும் வீரர்களை பரிசேதித்து தகுதியானவர்களை மட்டும் ஜல்லிக்கட்டு திடலுக்கு அனுமதித்தனர். இதேபோல் கால்நடை மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதித்து தகுதியான காளைகளை மட்டும் அனுமதித்தனர்.
பரிசுகள்
ஜல்லிக்கட்டை காலை 9.10 மணி அளவில் லால்குடி கேட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல்முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டன.
இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியது. மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன.
இதில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 321காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்
28 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். 12 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com