கலெக்டரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கலெக்டரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
Published on

புதுச்சேரி

காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பெண் தற்கொலை

புதுச்சேரி பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 38). அவரது மனைவி கலைச்செல்வி (35). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி சந்திரனும், அவரது மனைவி கலைச்செல்வியும் விசாரணைக்காக காலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

அப்போது போலீஸ் நிலையத்திலேயே கலைச்செல்வி திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கலெக்டருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

சப்-கலெக்டர் விசாரணை

இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் கந்தசாமி தனது விசாரணையை தொடங்கினார். அவர் கலைச்செல்வியின் கணவர் சந்திரன், அவரது குடும்பத்தினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் பணியில் இருந்த போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

போலீஸ் நிலையத்திற்கு பெட்ரோல், தீப்பெட்டியை எப்படி கலைச்செல்வி கொண்டு வந்தார் என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். பின்னர் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்காக அவர் கேட்டிருந்தார். ஆனால் போலீசார் அந்த கண்காணிப்பு கேமராவில் எதுவும் பதிவாகவில்லை என்று பதில் அளித்தனர்.

அறிக்கை சமர்ப்பிப்பு

இதனை தொடர்ந்து சப்-கலெக்டர் கந்தசாமி தனது விசாரணை அறிக்கையை தயாரித்தார். அந்த பணிகள் இன்று முடிவடைந்ததையடுத்து அதை மாவட்ட கலெக்டர் வல்லவனிடம் நேற்று சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com