“ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும்”-சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்ட செயலாளர்கள் பேட்டியால் பரபரப்பு

கட்சி கொள்கக்கு எதிராக வைகா செயல்படுகிறார் என்றும்,, ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று சிவகங்கை, விருதுநகர் உள்பட அக்கட்சியின் 3 மாவட்ட செயலாளர்கள் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
“ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும்”-சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்ட செயலாளர்கள் பேட்டியால் பரபரப்பு
Published on

சிவகங்கை,

கட்சி கொள்கக்கு எதிராக வைகா செயல்படுகிறார் என்றும்,, ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று சிவகங்கை, விருதுநகர் உள்பட அக்கட்சியின் 3 மாவட்ட செயலாளர்கள் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சி கொள்கைக்கு எதிராக...

சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். இந்த கட்சி, தி.மு.க.வில் குடும்ப அரசியல் இருப்பதாக கூறித்தான் அதில் இருந்து பிரிந்து உருவானது. தற்பாது அதே நிலையில் தன் மகனை துணை பொதுச்செயலாளராக நியமிக்க கட்சியின் கொள்கைக்கு எதிராக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார்.

எனவே அவரது இந்த கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே இனி ம.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுத்து உள்ளோம். மேலும் ம.தி.மு.க.வை கலைத்துவிட்டு தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது மாவட்ட துணைச் செயலாளர் தங்கபாண்டியன், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் மோகன், சிவகங்கை மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் பாரதமணி உள்ளிட்டோர் இருந்தனர்.

ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் அவர்கள் பேட்டி அளித்த சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பனின் அலுவலகத்திற்கு வெளியே கட்சியினர் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிவந்தியப்பன் உள்ளிட்டவர்கள் வைகோவுக்கு எதிராக பேட்டி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட பொதுச்செயலாளர் சார்லஸ், தலைமை கழக தீர்மானக்குழு உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ம.தி.மு.க.வினர் அனைவரும் வைகோவை முழுமையாக ஆதரிக்கிறோம். வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து சிவகங்கை துணை சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவகங்கை தாசில்தார் தங்கமணி உள்ளிட்ட அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேசினர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com