அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல - முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல - முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
Published on

பெங்களூரு,

போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் 2-வது நாளுக்கும் வந்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் தொந்தரவை அனுபவித்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலத்தில் அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவது பற்றி ஊழியர்களுக்கு நன்கு தெரியும். போக்குவரத்து ஊழியர்களின் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதற்கு உரிமை உள்ளது.

ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அரசுக்கும் பொறுப்புகள் உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதும் அரசின் பொறுப்பாகும்.

எல்லா கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும், தற்சமயம் நிறைவேற்ற கூடிய கோரிக்கைகளுக்காவது அரசு தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com