

காரைக்கால்
காரைக்காலில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி நர்சிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நர்ஸ்
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம் அமல்ராஜ். அவரது மனைவி எலிசபெத் ராணி (வயது 45). இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் தோழியான ஆத்ரின் மேரி என்பவர் மூலம் அதே ஊரை சேர்ந்த ஹரி அருள்ராஜ் (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஹரி அருள்ராஜ், தான் செக் குடியரசு நாட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பதாகவும், அங்கு நர்சு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்றும் ஆசைவார்த்தை கூறினார்.
ரூ.1 லட்சம் மோசடி
அந்த வேலையை தான் வாங்கித்தருவதாகவும், இதற்காக ரூ.1 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். வேலை கிடைக்கும் என்ற ஆசையில் எலிசபெத் ராணியும் ரூ.1 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ஹரி அருள்ராஜ் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைவாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலைவாங்கி கொடுக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த எலிசபெத் ராணி, ஹரி அருள்ராஜிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
அதற்கு, ஹரி அருள்ராஜ் பணத்தை கொடுக்க முடியாது, இதற்கு மேல் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால், காரைக்கால் வந்து உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த எலிசபெத் ராணி, கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி அருள்ராஜை தேடி வருகின்றனர்.